ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு எதிராக உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என ஈரோடு மாவட்ட பாஜக துணை தலைவர் கே பி ராமலிங்கம் தெரித்துள்ளார்.
ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் , அதிமுக கூட்டணியில், தாமாக தனது வாய்ப்பை விட்டுக்கொடுத்த நிலையில் எடப்பாடி தரப்பில் ஒருவரும் , ஓபிஎஸ் தரப்பில் ஒருவரும் என இருமுனை போட்டிகளாகவும் தேர்தலை சந்திக்க உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்த பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மாநில துணை தலைவர் கே பி ராமலிங்கம் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கடலூரில் நடைபெற்ற மாநில செயற்குழுக்கூட்ட முடிவின் படி ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடிக்க வியூகம் அமைக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது. திமுக வெற்றி பெற்றால் ஊழலுக்கு அங்கீகாரம் , குடும்ப ஆட்சிக்கு அங்கீகாரம் தேடிக்கொள்வார்கள் என்பதால் மக்களை வேண்டி கொள்கிறேன். இடைத்தேர்தல் குறித்து 2 நாட்களில் மாநில தலைவர் சரியான முடிவை அறிவிப்பார். கால அவகாசம் உள்ளதால் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளும் ஒன்றாக கூட சேரலாம்.
திமுக எதிராக உள்ள அணிகள் ஒன்றாக சேர வேண்டும். அதிமுகவை மத்தியஸ்தம் செய்யும் இடத்தில் பாஜக இல்லை.அடுத்த கட்சியின் அந்தரங்க விஷயத்தில் தலையிட விரும்பவில்லை, பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது. பா.ஜ.க போட்டியிட வேண்டும் என மக்களும் நினைக்கிறார்கள்.நடைபெறும் ஊழல் ஆட்சிக்கு எதிராக மக்களிடம் ஆதரவு திரட்டுவோம். மக்களும் அதே மனநிலையில் தான் உள்ளனர் என தெரிதித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் உதயநிதி ஸ்டாலின் ஒரு சிறுபிள்ளை, விளையாட்டு பிள்ளை, விளையாட்டுபிள்ளைக்கு வரலாறு தெரியாது. திமுகவை தோற்கடிக்க எத்தகைய வியூகம் எடுக்க வேண்டுமோ, அந்த வியூகத்தை சரியாக எடுப்போம். தேர்தல் நிலைப்பாடு குறித்து இன்னும் இரண்டு தினங்களில் எங்கள் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பார். இந்து அறநிலைய வருமானம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். முடிந்தால் தனி பட்ஜெட் போடட்டும் . பா.ம.க இந்த தேர்தலை புறக்கணித்தாலும், அவர்கள் இன்னும் பாஜக தலைமையிலான தேசிய கூட்டணியில் தான் உள்ளனர் என்றும் கூறினார்.