விளம்பத்திற்காக நடத்தி வைக்கும் திருமணங்கள் என்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி வைத்த திருமணமே சாட்சி என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள சுந்தரேஸ்வரர் கோயில் மிகவும் பழமையான கோயில் ஆகும். இந்த கோயில் நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாக விளங்குகிறது. அப்படிப்பட்ட புகழ்வாய்ந்த இக்கோயிலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. அதன் பிறகு திருத்தேர் சிதலமடைந்ததால் இந்த பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மரத் திருத்தேர் செய்வதற்கானஅரசாணை வெளியிடப்பட்டது. அதற்காக கோயிலின் நிதி மூலம் 49.50 லட்சமும், நன்கொடையாக ரூ.49.50 லட்சம் என மொத்தம் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் திருதேர் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பூஜை இன்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் தேர் செய்வதற்கான பணிகளை தொடங்கி வைத்தனர். இந்த தேரானது 36 அடி உயரமும், 14 அடி அகலமும், 5 அடுக்குகளை கொண்டதாக உருவாக்கப்பட உள்ளது. தேருக்கான பணிகள் முடிந்து வீதி உலா வருவதற்கான ஏற்பாடுகள் விரைவில் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, திமுக ஆட்சியில் 31 கோடி ரூபாய் செலவில் 51 மரத் தேர்கள் செய்யப்பட்டதாகவும், 876 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றதாகவும் தெரிவித்தார். கடந்தாண்டு 500 திருமணங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 34 திருமணங்களை முதலமைச்சர் முன்னின்று நடத்தி வைத்ததாக குறிப்பிட்டார். முதலமைச்சர் கருணை உள்ளத்தோடு திருமணங்களை நடத்தி வைத்தாக கூறிய அவர், விளம்பத்திற்காக நடத்தி வைக்கும் திருமணங்கள் என்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி வைத்த திருமணமே சாட்சி என விமர்சித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா








