அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது..
” அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 7.4.2023 – வெள்ளிக் கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் என ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







