திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சி பர்மா காலனி ஏழாவது தெருவில் வசித்து வந்தவர் ஜெயந்தி (36). இவரது கணவர் விஜயன். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜெயந்தி கணவனை பிரிந்து மகள்களுடன் வசித்து வந்த நிலையில் அதிமுகவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராக உள்ளார்.
இதனிடையே நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த போது இளைய மகள் கிருஷ்மிளா தலை முடிக்கு கலரிங் செய்துள்ளார், இதனை ஜெயந்தி கண்டித்ததால் கோபமான கிருஷ்மிளா வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்களை தள்ளி விட்டுள்ளார். இதில் மனம் உடைந்த ஜெயந்தி மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார். அப்போது இவரது அலறல் சத்தம் கேட்ட மகள்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜெயந்தியை மீட்டு நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதற்கட்ட சிகிச்சை அளித்து பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து அவரது மூத்த மகள் ஷாலினி(18) நவல்பட்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்தவர் அதிமுகவில் மாவட்ட நிர்வாகி பொறுப்பில் இருந்ததால் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் கடிதம் வெளியிட்டு உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.







