அதிமுக அலுவலகத்திற்கு சீல்; உயர்நீதிமன்றத்தை நாடிய இபிஎஸ்

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு நேற்று நடந்த அதே சமயத்தில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். அப்போது, எடப்பாடி…

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு நேற்று நடந்த அதே சமயத்தில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் உண்டானது. ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்ததால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டம் – ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார். அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதைக் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.