சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத சபாநாயகரை கண்டிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டையுடன் பேரவையில் பங்கேற்றனர்
2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரைக்கு கூட்டனிக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். இதனிடையே முதலமைச்சர் பேசிக் கொண்டிருக்கும் போது பாதியிலே ஆளுநர் வெளியேறினார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் விவாதமும் இன்று தொடங்கியது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு சட்டையுடன் பேரவையில் பங்கேற்றனர்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தை நேரிலும் கடிதம் வாயிலாகவும் வெளிப்படுத்திய போதும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத சபாநாயகரை கண்டிக்கும் வகையில் கருப்பு சட்டையுடன் பேரவையில் பங்கேற்பதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும் கடந்த ஒன்பதாம் தேதி ஆளுநர் உரையின் போது சட்டமன்ற மரபை மீறி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டையுடன் இன்றைய பேரவை நிகழ்வில் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




