அதிமுகவில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பிரச்சினையை தீர்த்துக்கொள்ளவே ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லி சென்றுள்ளதாக கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சென்னையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. கூட்டம் நிறைவுற்ற நிலையில் சென்னை தி.நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாநிலக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசியல் சூழல், மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என்றார்.திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல நல்ல நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாகவும், இனியும் பல நல்ல நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாகவும் கூறினார். மக்களின் ஆதரவு பெரும் வகையில் திமுகவின் நடவடிக்கை தொடர வேண்டும் என்றார்.
அதிமுகவில் ஏகப்பட்ட கோஷ்டிகள் உருவாகி இருப்பதாகவும், தற்போது கோஷ்டி பிரச்சனையை தீர்த்துக்கொள்ள டெல்லி பயணம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்த பாலகிருஷ்ணன், “ கோஷ்டி பிரச்சனை குறித்து பிரதமரிடம் முறையீடு சென்றுள்ளதே அதிமுக பலவீனமாக இருப்பதற்கு சான்று” என குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சியில் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வில்லை என திமுகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுகவிற்கு தார்மீக உரிமை இல்லை எனவும் அவர் சாடினார்.