அதிமுக தலைமை அலுவலக விவகாரம்; விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவு!

அதிமுக தலைமை அலுவலகம் முன் கடந்த 11-ஆம் தேதி நடந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த…

அதிமுக தலைமை அலுவலகம் முன் கடந்த 11-ஆம் தேதி நடந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ஆம் தேதி நடந்த கலவரத்தைத் தொடர்ந்து, தலைமை அலுவலகத்துக்குச் சீல் வைத்து வருவாய்க் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், பொதுக்குழுக் கூட்டம் நடந்த போது கட்சித் தலைமை அலுவலகத்துக்குள் சமூக விரோதிகள் நுழையக் கூடும் எனக் கூறி பாதுகாப்பு கோரி காவல் துறைக்கு மனு அளித்ததாகவும், ஆனால், போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்காததால் தான் வன்முறைச் சம்பவம் நடந்ததாக வாதிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் கட்சித் தலைமை அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கம்பியூட்டர், கோப்புகளை எடுத்துச்சென்று விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், கலவரம் ஏற்பட்ட போது தடுக்காமல் காவல்துறை அமைதி காத்ததாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

மேலும், அலுவலக சொத்தை பொறுத்தவரை அதன் உரிமை என்பது அதிமுகவிடம் உள்ளது எனவும், கட்சி விதிப்படி தலைமை நிலைய செயலாளர் தான் தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளர் எனவும், அலுவலகத்தின் உரிமை, சுவாதீனம் தொடர்பாக எந்த பிரச்சனையுமில்லை எனவும், பிரதான எதிர்க்கட்சியின் அலுவலகத்தைச் சீல் வைத்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது எனவும் வாதிடப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில் ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் கட்சி அலுவலகத்தை ஒப்படைக்கக் கோரியுள்ளார். கட்சி அலுவலகம் தனிநபர் சொத்தல்ல. தற்போது அவர் ஒருங்கிணைப்பாளரும் அல்ல. அவரை கட்சியிலிருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சீல் வைக்கும் முன் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. கலவரம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், கலவரம் சாலையில் நடந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

அண்மைச் செய்தி: ‘கம்பேக் கொடுத்தாரா லிங்குசாமி, தி வாரியர் திரைப்படத்தின் விமர்சனம்’

பன்னீர்செல்வம் தரப்பில், கட்சி அலுவலகத்தைப் பூட்டி தங்கள் தரப்பினர் நுழைவதைத் தடுத்தனர். பொருளாளர் என்ற முறையில் அலுவலகம் சென்றதாகக் குறிப்பிடப்பட்டது. இருவருக்கும் இடையிலான பிரச்சினையை வேறு வழிகளில்தான் தீர்க்க முடியும். உரிமையியல் நீதிமன்றத்தை நாட இருவருக்கும் அறிவுறுத்தலாம். மனதைச் செலுத்தாமல் இயந்திரத் தனமாக ஆர்.டி.ஓ. உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.

தொடர்ந்து காவல் துறை தரப்பில் ஊர்வலமாகத் தலைமை அலுவலகம் சென்ற பன்னீர்செல்வத்தைத் தடுக்க முயன்றும், அவர்கள் கேட்கவில்லை என்றும், இது காவல் துறையினருக்கும் – அதிமுகவினருக்கும் இடையிலான தகராறு அல்ல எனவும், கட்சியின் இரு பிரிவினருக்கும் இடையிலான பிரச்சினை. 300 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கடந்த 11-ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் முன் நடந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யக் காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளை பிற்பகலுக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.