28.6 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெத்தேல் நகர் குடியிருப்புகள் அகற்றக் கூடாது: உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்ற மார்க்சிஸ்ட் கட்சி

பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்றக் கூடாது தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பெத்தேல் நகர் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த முதற்கண் வெற்றி இதுவாகும். சென்னை, சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட, ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் சுமார் 3000 குடும்பங்களை வெளியேற்றுவதற்கு சேகர் என்பவர் பொய்யான ஆவணங்கள் மூலமும், போலி நபர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இப்பகுதி சதுப்பு நிலம் என 2013ல் உத்தரவு பெற்றார்.

இந்த உத்தரவை எதிர்த்து பொதுமக்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு 25.11.2015ம் ஆண்டு தமிழக அரசும், நில வருவாய் ஆணையரும் இப்பகுதி சதுப்பு நிலம் இல்லை எனவும், ‘அ’ பதிவேட்டில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும், இப்பகுதியில் ஏராளமான மக்கள் வீடு கட்டி குடியிருந்து வருவதால் இம்மக்களுக்கு நில ஒப்படைப்பு செய்து பட்டா வழங்கிடலாம் என நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தது.

ஆனால், இதை மறைத்து 2013ம் ஆண்டு உத்தரவின் அடிப்படையில் நீதிமன்ற அவமதிப்பு என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இப்பகுதி மக்களின் வீடுகளை அகற்றுவதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெத்தேல் நகர் மக்களுக்கு ஆதரவாக கடந்த 2018ம் ஆண்டிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இப்போராட்டங்களில் கட்சியின் மாநில தலைவர்கள் தோழர்கள்  ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், பி. சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, எம். சின்னதுரை உள்ளிட்டு பலர் கலந்து கொண்டுள்ளனர்.

பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்றக் கூடாது எனவும், அவர்களுக்கு பட்டா வழங்கிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலும் வலியுறுத்தியுள்ளனர். சமீபத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இம்மக்களின் வீடுகளை அப்புறப்படுத்தக் கூடாது எனவும், அவர்களுக்கு பட்டா வழங்கிடவும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

உயர்நீதிமன்ற உத்தரவின் படி, அனைத்து வீடுகளையும் இடிக்க நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை இத்தீர்ப்பை எதிர்த்து பெத்தேல் நகர் மக்களின் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது எங்களையும் வழக்கில் ஒரு தரப்பினராக சேர்க்க வேண்டுமெனவும், அதுவரை வீடுகளை அகற்றும் நடவடிக்கைகளை நிறுத்தித்தப்பட வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் மனு தொடுக்கப்பட்டு மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் வாதிட்டார். இந்த மனுவினை உயர்நீதிமன்றம் 7.4.2022 அன்று தள்ளுபடி செய்தது.

இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சி மற்றும் வழிகாட்டுதலின் பேரில் பெத்தேல் நகர் பேரவை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இன்று (14.7.2022) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், பத்மிடிகாந்தம் ஸ்ரீ நரசிம்மா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதிட்டார். இதில் உச்சநீதிமன்றம், அரசு பதில் அளிக்கவும் அது வரை தற்போதைய நிலையே (Status Quo) தொடரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இது பெத்தேல் நகர் பேரவை மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கிடைத்த முதற்கண் வெற்றியாகும். இவ்வழக்கில் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், என்.ஜி.ஆர். பிரசாத் மற்றும் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த அஇஅதிமுக அரசின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி 2015ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசும், நில வருவாய் ஆணையரும் சமர்ப்பித்த பிரமான வாக்குமூலத்தின் அடிப்படையில் இம்மக்களின் வாழ்விட உரிமையை உறுதி செய்து, அம்மக்களுக்கு பட்டா வழங்கிடுவதற்கு உரிய முறையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

மேலும் இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்னுதாரணமாக கொண்டு தமிழகத்தின் இதர பகுதிகளில் பல்லாண்டு காலமாக குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading