அதிமுக சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி உதவி அளிக்கப்படுவதாக அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மருத்துவ பிரச்னை களையும் நிதி நெருக்கடியையும் தமிழக அரசு சந்தித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள், தொழிழ் நிறுவனங்கள் தாமாக முன்வந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், வெளிநாடு வாழ் தமிழகர்கள், பொதுமக்கள் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். சில அரசியல் கட்சிகள், தங்கள் கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் தொகுதி நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், அதிமுக சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி உதவி அளிக்கப் படுவதாக அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் அளிக்கப்படும்.

மேலும், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும், கொரோனா நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும். இப்பெருந்தொற்றின் முதல் அலை மக்களை தாக்கிய நேரத்தில், கடந்த ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் நாடு அரசிடம் 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இப்பொழுது அரசிடம் கழகத்தின் சார்பில் வழங்கப்படுகின்ற 1 கோடி ரூபாய் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் ஆகியவற்றோடு, ஆங்காங்கே தொண்டர்கள் தங்கள் பகுதிகளில் அல்லலுறும் மக்களுக்கு கொடைக்கரம் விரித்து நீட்டி நம் கொள்கை வழி நின்று மக்களின் துன்பம் துடைத்திட வேண்டும்.
“கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே/ இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே/
ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே”- என்ற எம்.ஜி.ஆரின் கொள்கை வழி நின்று தொண்டர்கள் நிவாரணப் பணிகளில் அக்கறை கொள்ளுங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.







