வாரணாசியில் நடைபெற்ற “காசி தமிழ்ச் சங்கமம்” நிகழ்ச்சியை தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தி தமிழ் சங்கமம் நடைபெற உள்ளது.
கடந்த வருடம் உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் ”காசி தமிழ்ச் சங்கமம்” நிகழ்ச்சி நடை பெற்றது. இரண்டு மாநிலங்களின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தும் பொருட்டு இந்த நிகழ்ச்சியை மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மேலும் பல மாநிலங்களில் தொடரலாம் என அப்போதே எதிர்பார்க்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், உ.பி.யை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு இடையிலான உறவை போற்றும் வகையில் ‘அகமதாபாத் தமிழ்ச் சங்கமம்” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உ.பி.யில் ஆன்மிகத்தை முன்னிறுத்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டதுபோல் குஜராத்தில், உடல் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இது ஆரோக்கியம் தொடர்பான நிகழ்ச்சி என்பதால் அகமதாபாத் தமிழ்ச் சங்கமத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தலைமையேற்று நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மத்திய அரசின் கல்வி, ரயில்வே, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் செய்தி ஒலிபரப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த உள்ளன. இது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
மார்ச் 19ம் தேதி அகமதாபாத் தமிழ் சங்கமம் தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் சென்னையில் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் போது அகமதாபாத் தமிழ் சங்கமம் தொடர்பான இணையதளமும் அறிவிக்கப்படும். குஜராத் பல்கலைக் கழகத்தில் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 10 நாட்கள் நடைபெறும்.
இதனையும் படியுங்கள்: கன்னியாகுமரி சாமிதோப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!
அகமதாபாத் தமிழ் சங்கமம் பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் நடைபெறுவதால், இந்த சங்கமத்தில் பாஜகவினர் பெரும் பங்கு வகிக்க உள்ளனர். இதில், தமிழக பாஜகவின் ஐ.டி. பிரிவுக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது சவுராஷ்டிராவினர் தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் இருப்பதாக கருதப்படுகிறது. குஜராத்திகளும் தமிழ்நாட்டில் பல லட்சம் பேர் உள்ளனர். இதுபோல் தமிழர்களும் குஜராத்தில் ஏராளமானோர் உள்ளனர். இதற்காக அகமதாபாத் சங்கமம் குறித்து மத்திய அமைச்சர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மாவட்டங்களில் கூட்டங்களும் நடத்தப்பட உள்ளது.
காசி தமிழ்ச் சங்கமத்துக்கு மத்திய கல்வி அமைச்சகம் விடுத்த அழைப்பை தமிழக அரசு நிராகரித்துள்ளது. இருப்பினும் இரண்டாவது சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட உள்ளது. இதை தமிழக அரசு ஏற்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
– யாழன்