உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக, நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தெலுங்கானா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து அரசியலமைப்பு முட்டுக்கட்டை செய்து வருவதாக, அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜக்கு எதிராக தெலுங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மனு தாக்கல் செய்திருந்தது. அதில் குறிப்பாக தெலுங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் தெலுங்கானா ஆளுநரின் அலுவலகத்தில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக எந்த ஒரு தகவலும் இல்லாமல் நிலுவையில் உள்ளதாகவும், இது குறித்து மீண்டும் மீண்டும் ஆளுநரிடம் நினைவூட்டப்பட்ட போதிலும் அவை கண்டு கொள்ளப்படவில்லை எனவும் அந்த
மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தெலுங்கானா அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க சில மணி நேரங்களே இருந்த சூழலில், தற்போது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் 3 மசோதாக்களுக்கு அனுமதி வழங்கி ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மீதம் நிலுவையில் உள்ள மற்ற மசோதாக்களின் நிலை குறித்த அறிவிப்பை ஆளுநரின் அலுவலகம், தெலுங்கானா அரசுக்கு அனுப்பிஇருப்பதாகவும் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் இரண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் , மூன்று அவரது தீவிரப் பரிசீலனையில் இருந்து வருவதாகவும், மேலும் இரண்டில் அரசிடம் விளக்கங்கள் கேட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், தெலுங்கானா அரசு தொடர்ந்த வழக்கின் உச்சநீதிமன்ற விசாரணையை கருத்தில் கொண்டு தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தாலும் , முக்கியத்துவம் இல்லாத மூன்று மசோதாக்களுக்கு தான் ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா