விவசாயிகளே… வேளாண் பட்ஜெட்டில் என்ன வேண்டும்? தமிழக அரசுக்கு கருத்து சொல்லுங்கள்…

2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டுள்ளார். 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னர் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்,…

2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டுள்ளார்.

2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னர் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளை சார்ந்த மக்களின் கருத்துக்களை கேட்டு அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, 2023-24ம் நிதியாண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு வேளாண்மை துறை அமைச்சகம் மக்களிடம் கருத்துகளை கேட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துகளை உழவன் செயலி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

உழவன் செயலி மூலம் தெரிவிக்க விரும்புவோர் அந்த செயலியில் வேளாண் நிதிநிலை அறிக்கை எனும் பக்கத்திற்கு சென்று தெரிவிக்கலாம். கடிதம் மூலம் தெரிவிக்க விரும்புகிறவர்கள், ‘வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) அரசுச் செயலர், வேளாண்மை உழவர் நலத்துறை, தலைமைச் செயலகம், புனித செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை -600009’ என்ற முகவரிக்கு கடிதத்தை அனுப்பலாம்.

மின்னஞ்சல் மூலமாக கருத்துகளை தெரிவிக்க விரும்புவர்கள் ’ tnfarmersbudget@gmail.com’ என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மேலும் ’ 9363440360’ என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தொலைபேசி மூலமாகவும் கருத்துகளை தெரிவிக்கலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.