அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் மீது பொய் வழக்குப் பதிந்ததாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதியில் நேற்று முன் தினம் தேர்தல் வாக்குப் பதிவின் போது அதிமுக, திமுக கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக முதலியார் பேட்டையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மற்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலியார் பேட்டையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மீது காவல் நிலையத்தில் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், வழக்கை திரும்பபெற கோரியும் காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்தும் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தலைமையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தால் புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து பாதித்தது. இந்த நிலையில் இரு தினங்களில் வழக்கை ரத்து செய்வதாகவும், பொய் வழக்கு பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் உயர் அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.







