திருப்பூர் குடிநீர் திட்டப்பணிக்காக, பவானி ஆற்றை தடுக்க எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையத்தில் அதிமுக கவுன்சிலர்கள் பவானி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு தற்போது 15-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஏற்கனவே கோவை மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் வசித்து வரும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இங்கிருந்து ஆற்று நீர் கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு ரூபாய் 840 கோடி திட்ட மதிப்பில் திருப்பூர் இரண்டாம் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு இதற்கான பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.
மேட்டுப்பாளையம் நகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய பவானி ஆற்றங்கரையோரம் தண்ணீர் எடுக்க அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்திற்கு அருகே சுமார் ஐந்நூறு மீட்டர் முன்பாக இந்த புதிய திருப்பூர் இரண்டாம் குடிநீர்
திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கும் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றில் இருந்து தண்ணீரை உறுஞ்சி எடுக்கும் சோதனை ஓட்ட பணிக்காக அதன் நீரேற்று நிலையத்தின் எதிரே ஆற்று நீரை தடுத்து திருப்பும் விதமாக பெரிய பாறைகள் மற்றும் மண்ணை நவீன ஜேசிபி இயந்தரங்கள் மூலம் கொட்டி ஒரு தடுப்பணையை உருவாக்கியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்ட பணிகள் போதிய நீரின்றி முடங்கும் சூழல் உருவாகியுள்ளதாக குற்றம்சாட்டி அதிமுக – வை சேர்ந்த மேட்டுப்பாளையம் நகரமன்ற வார்டு உறுப்பினர்கள் ஐந்து பேர் பவானி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர், காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி இரண்டு தினங்களில் ஆற்றில் அமைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
—–ரூபி.காமராஜ்