சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை குஷ்பு இருந்து வீடு திரும்பினார்.
சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்ற குஷ்புக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனை அவர் பொருட்படுத்தாத நிலையில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி இரவு உடல்நிலை மோசமாகியுள்ளது. இதனையடுத்து அவரது உதவியாளர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளதாகத் தெரிகிறது. மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின
இதனையடுத்து காய்ச்சல் மற்றும் உடல் வலி காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ” கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன். உடல் நிலை கடுமையாக பலவீனம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடலில் ஏற்படும் அறிகுறிகளைச் சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள், அதனைப் புறந்தள்ளி விடாதீர்கள். கவனிக்காமல் விட்டதால் தான் நான் தற்போது மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளேன். விரைவில் குணமடைவேன் என நம்புகிறேன். ஆனால் அது நீண்ட நாட்களாகும் என்று நினைக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து நடிகை குஷ்பு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
” தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளேன். நீண்ட ஓய்வை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள். ஒரு வாரத்திற்கு பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். அதன் பின்னர் மருத்துவரின் பரிந்துரையுடன் எனது அலுவலகத்திற்கு திரும்புவேன். உலகம் முழுவதிலும் இருந்து எனக்காக அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.







