திருச்சியில் நடைபெற உள்ள அதிமுக முப்பெரும் விழா மாநாட்டில் சசிகலா கலந்துகொள்வது குறித்து முறைப்படியான அறிவிப்பு ஒவ்வொன்றாக வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி பெரியகுளம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா, அதிமுக 50 ஆண்டுகள் பரிபூரண வெற்றியடைந்து 51 ஆண்டில் அடி எடுத்து வைக்கும் விழா என திருச்சி மாநகரில் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக முப்பெரும் விழா மாநாடு நடைபெற இருக்கிறது.
இதையும் படியுங்கள் : கடைசி ஓவரில் 5 சிக்சர்… ரிங்கு சிங் அதிரடி… குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி த்ரில் வெற்றி
தமிழ்நாட்டில் இருக்கும் அதிமுக தொண்டர்கள் அங்கு லட்சக்கணக்கில் கூடி, அதிமுகவின் வலிமையை நிரூபிப்பார்கள். கட்சியிலிருந்து முன்பு நீக்கப்பட்ட அன்வர் ராஜா, கே.சி.பழனிச்சாமி போன்ற மூத்த முன்னோடிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் அந்த முப்பெரும் விழா மாநாட்டில் கலந்து கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும், திருச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சசிகலாவிற்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், அதுகுறித்து முறைப்படியான அறிவிப்பு ஒவ்வொன்றாக வரும் என்றும், அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறினார்.







