சிலைக்கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான 330 ஏக்கர் நிலத்தில், தற்போது 24 ஏக்கர் மட்டுமே இருப்பதாக கூறினார்.
கடந்த பத்து ஆண்டுகால ஆட்சியல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் புனரமைக்கப்படாமலும், கும்பாபிஷேகம் நடத்தப்படாமலும் உள்ளதாக கூறிய அவர், இனிவரும் காலங்களில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
கோயிலில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மேலும், சிலைக்கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.







