புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழாவை துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தும் பணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற இலக்கோடு புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் நான்காவது முறையாக இந்த தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழா இன்று முதல் திங்கள்கிழமை வரை மூன்று நாட்களாக 100 மையங்களில் நடைபெறுகிறது. வீராம்பட்டினம் துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர், “புதுச்சேரியில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நேற்று முதல் கர்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் புதுவை முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம், அதன் மூலம் மழை நீரை சேமிக்கலாம்.” என்று கூறியுள்ளார்.
மேலும், “விமான நிலைய விரிவாக்கத்துக்கு செயல் திட்டம் தயாராக உள்ளது, இதனால் புதுச்சேரி தமிழகம் வளர்ச்சி அடையும்.” என்றும், “நாளை மறுநாள் நாள் தெலுங்கான மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் மக்களுடன் என்னுடைய இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இதுவரை 37,21,96,268 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 30,55,802 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.