தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் பணிகளை முறையாக செய்யாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சைதாப்பேட்டை பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வந்த பாலச்சந்தர் என்பவர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டார். பணி நீக்கத்துக்கு ஒப்புதல் கோரி, தொழிலாளர் நலத்துறை துணை ஆணையரை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அணுகிய போது, விசாரணை குறித்து தகவல்கள் முறையாக இணைக்கப்படாததால் பணி நீக்கத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை எதிர்த்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த விவாகரத்தை மீண்டும் விசாரிக்குமாறு தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கு உத்தரவிட்டார். மேலும், போக்குவரத்து கழகங்களில் தவறு செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், ஊழல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக நடவடிக்கை எடுப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற விவகாரங்களில் அதிகாரிகள், உரிய முறையில் பணிகளை செய்யாததால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதி, தங்களது பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப போக்குவரத்து துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.