கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழப்பு எனத் தகவல்!

கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும்…

கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள்,  குளங்கள் நிரம்பி வழிகின்றன.

இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தலைவன் வடலி, கீரனூர், தண்ணீர் பந்தல், நரசன்விளை, சேர்ந்தபூமகளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளப்பெருக்கால் தனித்தீவுகளாக காட்சியளிக்கிறது. மழை நின்று இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையிலும் கூட தாமிரபரணியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் இந்த கிராமங்கள் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதிகளிலுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கவே கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் கடும் சிரமங்களுக்கிடையே படகுகளில் அப்பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு, தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர் கன மழையின் காரணமாக வீடு இடிந்து மின்சாரம் தாக்கி இந்த 12 பேர் உயிரிழந்ததாக தெரியவருகிறது. அதோடு,  தூத்துக்குடி மாவட்டத்தில் உயிரிழந்துள்ள பலரின் உடலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல்கூராய்வு செய்ய கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.