வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக-வாக போட்டியிட்டு மகத்தான வெற்றி பெறுவோம் என வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட
உதவிகள் வழங்கும் விழா சென்னை மேடவாக்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வி.கே.சசிகலா, ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஏழை மக்களுக்கு தையல் மிஷின், குக்கர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து விழா மேடையில் பேசிய சசிகலா, “தாய்க்கு தாயாக, தோழிக்கு தோழியாக, சகோதரிக்கு சகோதரியாக 40 ஆண்டு காலம் ஜெயலலிதாவோடு நான் மேற்கொண்ட பயணம் மிகவும் புனிதமானது. எங்களுடைய பயணத்தில் எத்தனையோ மகிழ்ச்சிகள் துயரங்கள் இருந்தது. ஆனால் மகிழ்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தினோம். ஒரு நாளும் எங்களுடைய துன்பங்களை யாரிடமும் பகிர்ந்தது கிடையாது. அவற்றை நாங்கள் இருவருமே சமாளித்துள்ளோம். அதிலிருந்து மீண்டு வந்து வெற்றியையும் பெற்றுள்ளோம். இதுதான் நாங்கள் எங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொண்டது.
’ஜெயலலிதா என்னும் நான்’ என்று தமிழ் மண்ணில் எப்போது உச்சரிக்கப்பட்டதோ, அந்த
காலக்கட்டத்தில் இருந்து தமிழ்நாடு தலை நிமிர்ந்து. தமிழர்கள் தங்கள் உரிமைகளை
பறிகொடுத்து விடாமல் பார்த்துக் கொள்ள முடிந்தது. மகிழ்ச்சியோடும் பாதுகாப்புடன் தமிழ்நாட்டு மக்கள் இருக்க முடிந்தது. ஆனால் இன்று ஒவ்வொரு நாளும் நடக்கின்ற அவலங்களையும் கொடுமைகளையும் தமிழ்நாடு மக்கள் அனைவரும் கண்கூடாக
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள் : தேர்தல் ஆணையத்தில் நாதக புகார் மனு அளித்தது ஏன்? – சீமான் விளக்கம்
ஆவின் பால் தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. சொத்து வரி 150% உயர்ந்துள்ளது. சட்டம் வழங்கு சீர்கெட்டு இருக்கிறது. போதைப் பொருள்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அதேபோல் இன்றைக்கு உள்ள நிதி நெருக்கடியில், யாருக்கும் பயனளிக்காத வகையில் பேனா சிலை அமைக்க 80 கோடி ரூபாய், மக்கள் வரிப்பணத்தை செலவழிக்க தயாராக இருக்கும் இந்த அரசை விரைவில் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
அதிமுக எத்தனையோ உயிர் தியாகத்தால் உருவான இயக்கம். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மிகுந்த சிரமப்பட்டு வளர்த்த இயக்கம். இதை அவ்வளவு எளிதாக
யாரும் அழித்துவிடவோ, அபகரித்து விடவோ எண்ணினால், அதில் தோல்வியை தான்
அடைவார்கள். விரைவில் அனைவரும் ஒன்றிணைந்து, அதே வலிமையோடு நம் கழகம் மீண்டும் உயிர்த்தெழும்.
ஒருங்கிணைந்த அதிமுக, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, மகத்தான வெற்றியை மக்கள் ஆதரவோடு பெறும். இந்த இலக்கை நோக்கியே நமது பயணம். இதைதான் நம் கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கையோடு இருங்கள். இதை கண்டிப்பாக நான் செய்து காட்டுவேன். அதுவரை ஓயமாட்டேன். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கொடுத்த அதே வலிமையோடு, கட்சியை மீண்டும் அமைப்போம் என்ற உறுதி ஏற்போம்” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “உச்சநீதிமன்ற தீர்ப்பு 80 பக்க தீர்ப்பு. இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய வழக்கு சிவில் நீதிமன்றத்தில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிறது. இந்த 22 மாதங்களில் எந்த வேலையும் செய்யவில்லை. ஆமை வேகத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு பணம் பொருளை கொடுத்து ஒட்டு வாங்கலாம் என்று நினைக்கிறார்கள். இது இடைத்தேர்தல் தான். இதனால் ஆட்சி மாற வாய்ப்பில்லை. பொதுத் தேர்தலில் மக்கள் தக்க பாடத்தை திமுகவிற்கு கொடுப்பார்கள்.
தனி நபர் யாருமே முடிவெடுக்க முடியாது. அதிமுகவை பொறுத்தவரை அடிமட்ட
தொண்டர்களின் முடிவு தான் இறுதி முடிவு. இதில் ஓபிஎஸ்-க்கு பின்னடைவு கிடையாது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவிற்கு நிச்சயமாக வருகிற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும். திமுக ஆட்சியில் இதுவரை என்ன நடந்துள்ளது என்பதை நான் பார்த்து வருகிறேன். அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை 4 பேர் முடிவு செய்கிறார்கள். அதிகாரிகள் முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
அமைச்சர்களுக்கு எந்த வேலையும் இல்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தால், மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அரசு சிறப்பாக செயல்படும். தமிழ்நாட்டில் தொழில் செய்யும் நிறுவனங்களிடம் திமுக பங்கு கேட்கிறார்கள். இதனால் நிறுவனங்கள் தொழில் செய்ய பயப்படுகிறார்கள். திமுக ஒவ்வொரு நிறுவனத்தை மூடி வருவதால், வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து திமுக அரசு குறித்து எடுத்துரைப்பேன். ஈரோடு கிழக்கில் யாரும் நடமாட முடியவில்லை. ஒருங்கிணைந்த அதிமுகவாக மீண்டும் மாறும். மக்கள் நம்பி வாக்களிப்பார்கள்” என்று கூறினார்.