அரசு பேருந்தின் சக்கரத்திற்கு அடியில் படுத்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரது மனைவி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது, திடீரென்று அவர் மனைவியின் கையை உதறி விட்டு திருவண்ணாமலை பகுதியில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் முன் படுத்துக்கொண்டார். இதைக்கண்ட பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார்.
ஆனால், பேருந்துக்கு அடியில் படுத்துக்கொண்டு கலியமூர்த்தி வெளியே வர மறுத்ததால் சங்கராபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரை பேருந்துக்கு அடியில் இருந்து பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசாரிடம் கலியமூர்த்திக்கு உடல் நிலை சரியில்லாததால் மனதளவில் பாதிக்கப்பட்டுவிட்டதாக அவரது மனைவி தெரிவித்தார்.
மேலும், சில நாட்களாக தனது கணவர் தன்னிடம் சண்டையிட்டு வருவதாக கூறினார். அங்கிருந்து அவரை போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உடல்நிலை சரியில்லை என சிகிச்சைக்காக வந்த நபர் அரசு பேருந்தின் சக்கரத்தின் அடியில் படுத்துக்கொண்டு வெளியே வர மறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.







