நான் ஒரு அப்பாவி பையனின் தாய். 28 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடமிருந்து அவன் பறிக்கப்பட்டான். அப்போது அவனுக்கு 19 வயது. அன்றுமுதல் நான் அவன் பின்னால் ஓட ஆரம்பித்தேன்.. இன்னும் ஓடுகிறேன்…
பேரறிவாளின் தாயார் அற்புதம்மாளின் ட்விட்டர் பயோவில் இருக்கும் வார்த்தைகள் இவை…
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எவ்வளவு வலிகளுடன் இந்த வார்த்தைகளை அந்த தாய் பதிவிட்டிருப்பார் என்பதை அனைவராலும் உணர முடியும். காரணம், 1991ஆம் ஆண்டு சின்ன விசாரணை என போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளனுக்காக, அவர் நடத்திய சட்டப்போராட்டம் மிகவும் பெரியது. வலிகள் நிறைந்தது.
அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் என, மகனின் விடுதலைப் போராட்டத்திற்காக அற்புதம்மாளின் கால்கள் செல்லாத இடமில்லை. 2014ஆம் ஆண்டு ராஜீவ் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் எழுவரையும் விடுதலை செய்வதாக சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. இதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த அற்புதம்மாள், ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
பேரறிவாளன் சுதந்திரக்காற்றை சுவாசிக்க இன்னும் 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது, ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுடன் எதிர்கொண்ட அந்த தாய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பேரறிவாளனின் விடுதலைக்கு, மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தபோதும் சட்டப்போராட்டம் நடத்தி மகனை மீட்பதில் இருந்து எள்ளளவும் பின்வாங்காவில்லை அந்த இரும்பு பெண்மணி.
2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பேரறிவாளனுக்கு தமிழ்நாடு அரசு ஒருமாதம் பரோல் வழங்கியது. இதற்காக, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி கூறினார் அற்புதம்மாள். மேலும், அதே ஆண்டில், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து அவர் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அற்புதம்மாளின் கோரிக்கைகளும், வலியுறுத்தல்களும் சட்டப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமலே இருந்தது. இதற்கிடையே, ஆட்சி பொறுப்பேற்றதும், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க முனைப்பு காட்டியது திமுக அரசு. அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு தொடர்ச்சியாக பரோல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், தற்போது விடுதலை அளித்து மன உறுதியுடன் போராடிய அற்புதம்மாளின் போராட்டத்திற்கு வெற்றியை பரிசளித்துள்ளது. ”வயித்தில குழந்தை இருக்குன்னு தெரிஞ்ச உடனே தாய்க்கு வர்ற பதட்டம் 10 மாசம் கழிச்சு பரவசமா மாறுது. விடுதலை கோப்பு ஆளுநருக்கு போய் இன்னையோட 10 மாசம் முடியுது. என் பதட்டம் தணியல. எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல?”
ஆளுநர் காலம் தாழ்த்தியதால் வருத்தத்துடன் அற்புதம்மாள் பதிவிட்ட இந்த வரிகளுக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. மகனின் விடுதலைக்காக 31 ஆண்டுகள் தொடர்ந்து ஓடிய அந்த தாயின் கால்களுக்கு இப்போது தான் ஓய்வு கிடைத்திருக்கிறது.
– தென்றல் பிரபாகரன்