தொண்டைப் பகுதியில் இருந்த கேன்சர் நோய் மருத்துவமனைக்கு போகமலேயே சரியானதால் அம்மனுக்கு சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி விரதமிருந்து வருகிறார்.
தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. முத்தாரம்மனை வழிபட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவது ஆண்டாண்டு கால நிகழ்வாகும்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சங்கனாங்குளம் ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரன் (46). இவர் சுமார் 35 ஆண்டுகளாக விதவிதமான வேடமணிந்து அம்மனை தரிசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு தொண்டை பகுதியில் கேன்சர் ஏற்பட்டு சிகிச்சைக்கு உள்ளானார். சிகிச்சையில் முன்னேற்றம் கிடைக்கப்பெறாத நிலையில் அம்மனை மனம் உருகி வழிபட்டு வந்தார் அதன் பலனாக அவருக்கு ஏற்பட்ட கேன்சர் நோயின் பாதிப்பு வெகுவாக குறைய தொடங்கியது. அதற்கு அம்மனுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடம் அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.
இந்த ஆண்டு வரும் 26 ஆம் தேதி முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி பக்தர் சந்திரன் சங்கனாங்குளத்தில் உள்ள சுடுகாட்டில் 6 அடி அளவில் நீளமான பள்ளம் தோண்டி குடில் அமைத்து 21 நாட்கள் விரதம் இருந்து வருகிறார். விரதத்தை முன்னிட்டு சுடுகாட்டு காளி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக விரதத்தை கடைபிடித்து வருகிறார்.
உணவு எதுவும் உட்கொள்ளாமல் காலை மாலை வேளைகளில் பால் கலக்காத காபியும் மற்ற வேளைகளில் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் கடைபிடிக்கிறார் . இருவேளை பூஜை நடத்தும் இவர் பூஜைக்கு முன்னதாக குளிப்பதற்காக மட்டுமே வெளியே வருகிறார் பகல் இரவு வேளைகளில் வெளியே வருவதில்லை. தொடர்ச்சியாக அம்மனின் அருள் கிடைத்ததாக கூறும் சந்திரனுக்கு ஏற்பட்ட கேன்சர் நோய் தற்போது மருத்துவ சிகிச்சை இன்றி முற்றிலும் குணமடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அம்மனின் அருள் மூலம் தனது நோய் குணமானது என்று கூறும் சந்திரன். வினோத விரதம் இருந்து வருவது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வியப்பில் உள்ளனர்.
இது குறித்து சுடுகாட்டு காளி சந்திரன் கூறியதாவது : எனக்கு வந்த தீராத நோய் கேன்சர் என்னை மரண வாசலில் கொண்டு போய் விட்டது. அந்த நேரத்தில் மருத்துவர்களும் உறவினர்களும் என்னை கைவிட்ட நேரத்தில் என்னை காப்பாற்றியது குலசை முத்தாரம்மன் தான். நான் 35 ஆண்டுகளாக குலசை முத்தாரம்மனின் பக்தர் தான். ஆனால் நான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட போது முத்தாரம்மன்னை மட்டுமே நம்பி இருந்தேன் என் நம்பிக்கை வீண் போகவில்லை.
அதனால் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக நினைத்து சுடுகாடு வரை சென்று உயிருடன் திரும்பியதால் முத்தாரம்மனின் ஒரு அவதாரம் சுடுகாட்டு காளி ஆகவே தான் கடந்த 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடமணிந்து 21 நாட்கள் அன்ன ஆகாரம் உண்ணாமல் சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்ய தோண்டப்படும் குழி போன்று குழி தோண்டி அந்த குழியில் தங்கி இரவு பகல் வசித்து வருகிறேன் என்று கூறினார்.
இதுகுறித்து அவரது பக்கத்து வீட்டுகாரர் சுபாஸ் சந்திர போஸ் கூறியதாவது : சந்திரன் கேன்சர் நோயால் இறந்து போவார் என்று டாக்டர் கூறி விட்டார் ஆனால் அவர் ஆத்தாவின் அருளால் பிழைத்து விட்டார். அதனால் சுடுகாட்டு காளி வேடமிட்டு இருக்கும் சந்திரன் அருள்வாக்கு சொன்னால் அது சரியாக தான் இருக்கும் என்பதால் தினமும் மக்கள் தேடி வருகின்றனர். இதனால் எங்கள் கிராமம் எப்போதும் செழிப்பாக உள்ளது என்று கூறினார்.
இதுகுறித்து சந்திரன் மகன் ரமேஷ் கூறியதாவது : எங்க அப்பா தண்ணீர் மட்டுமே குடித்து சுடுகாட்டில் விரதம் இருந்து வருகிறார். இந்த ஊரு , இந்த நாடு நல்லா இருக்கணும் என்ற நோக்கத்தில் கடந்த 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடமணிந்து சுடுகாட்டில் தங்கி இருந்து வருகிறார் என்று கூறினார்.







