பாலக்கோடு அருகே சூடானுார் கிராமத்தில் காட்டு பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் தானே சிக்கி விவசாயி உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த சூடானுார் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் என்பவரின் மகன் நவீன் (30). இவர் சூடானுாரில் தனது நெல் வயலில் இரவு நேரங்களில் காட்டு பன்றி புகுந்து சேதப்படுத்தி வந்ததால், காட்டு பன்றிகளை கொல்வதற்காக நெல்வயலை சுற்றி திருட்டுதனமாக மின்வேலி அமைத்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்வேலியில் நவீன் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காலையில் அவ்வழியாக சென்றவர்கள் நவீன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மின்சாரத்தை துண்டித்து உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
—-அனகா காளமேகன்







