சென்னை காசிமேடு அருகே முன்விரோதம் காரணமாக 4 பேர் சேர்ந்து சக நண்பனை கொலை செய்து கடற்கரையில் புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் கடந்த 14ம் தேதி சலூன் கடை ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஐவரும் காசிமேடு துறைமுகம் அருகே கடற்கரையில் தலைமறைவாகி மது அருந்தி வந்தனர். அப்போது அவர்களில் செல்வகுமார் என்பவர் அடிதடி வழக்கில் தனக்கு சம்பந்தம் இல்லை என்றும், தான் போலீசாரிடம் சரண் அடையப் போவதாகவும் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், தங்களை போலீசாரிடம் காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற ஆத்திரத்தில் செல்வகுமாரை மது பாட்டிலால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளனர். மேலும் அவரது உடலை கடற்கரையில் புதைத்துள்ளனர்.
இதையடுத்து, 8 நாட்கள் கழித்து 4 பேரும் எண்ணூர் அடிதடி வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததுள்ளனர். இதில், அவர்கள் 4 பேரும் சேர்ந்து செல்வகுமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கடற்கரையில் புதைக்கப்பட்ட செல்வகுமாரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







