ரூ.18,000 கோடி முதலீட்டில் 8,200 பேருக்கு வேலை – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்…!

தமிழ்நாட்டில் லார்சன் & டூப்ரோ நிறுவனம் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படட்டுள்ளது.

தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பக் குழுமங்களில் ஒன்றான லார்சன் & டூப்ரோ லிமிடெட் (Larsen & Toubro) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. எஸ். என். சுப்ரமண்யன் அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.

தமிழ்நாட்டில் இந்நிறுவனம், வெவ்வேறு துறைகளில் மேலும் 18,600 கோடி ரூபாய் முதலீட்டில் 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் அமைக்க முன்வந்துள்ளதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார். மேலும். தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின்போது, லார்சன் & டூப்ரோ லிமிடெட் (L&T) நிறுவனம் தமிழ்நாட்டில் பின்வரும் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது:

  1. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தகவல் தரவு மைய விரிவாக்கத் திட்டம்.
  2. கோயம்புத்தூரில் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் 2.000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம்.
  3. திருவள்ளூர் மாவட்டத்தில், 1.100 கோடி ரூபாய் முதலீட்டில் 5,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில். காட்டுப்பள்ளி L&T கப்பல் கட்டும்தளம் விரிவாக்கத் திட்டம்.

2036-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இலட்சிய இலக்கினை எய்துவதற்கான முயற்சியின் மைல் கல்லாக அமைந்துள்ள பல்துறை சார்ந்த இம்முதலீடுகளின் மூலம், மாநிலத்தில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகள் வளர்ச்சி பெறுவதுடன்.

மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பு மேம்படும். மேலும் காட்டுப்பள்ளி திட்டம். கடலோர காற்றாலை கட்டுருவாக்கத் தொழிலுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டுவரும். இத்திட்டங்கள் செயலாக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பெரிய அளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், மாநிலத்தின் பொருளாதாரமும் மேம்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர். தொழில் துறையில் மேற்கொள்ளப்படும் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார் இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார். இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் பு. அலர்மேல்மங்கை, இ.ஆ.ப., எல் & டி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.எஸ்.என். சுப்ரமண்யன், முன்முயற்சிகள் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் திரு.கே.ஜி.சத்யநாராயணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.