நடைப்பெற்று முடிந்த ஆறாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனநாயகப் படுகொலையின் சான்று என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று மாநிலங்களவையில் ஜனநாயகத்தின் விழுமியங்கள் பற்றி மாண்புமிகு வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க பேசியிருக்கிறார். மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை என்பதை அவரும் அறிந்திருப்பார். 150க்கும் அதிகமாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் கேட்கப்படாமலேயே 19 மசோதாக்கள் நிறைவேற்றபட்டிருக்கின்றன.
குடிமகன்களின் அடிப்படை சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் சீர்குலைத்துள்ள பெகாசஸ் வேவு பார்த்தல் பற்றி ஒரு நிமிடம்கூட விவாதிக்க மறுத்தனர், எதிக்கட்சிகளை கேட்காமலே, அறிவிக்கபப்ட்ட தேதிக்கு முன்பாகவே கூட்டத்தொடர் முடிந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்றம் என்கிற மதிப்புமிகு அவையை கேலிப் பொருளாக ஆக்கி இருக்கிறது ஆளும் கட்சி. எங்கள் குரல்கள் ஏன் கேட்கப்படவில்லை? இது என்ன ஜனநாயகம் என்று நாங்கள் கேட்கிறோம். கட்சி சாராத நடுநிலை பொறுப்பு வகிக்கும் மாண்புமிகு வெங்கையா நாயுடு எங்கள் உரிமைக்களுக்காகவும் எங்கள் ஜனநாயாகத்திற்காகவும் கொஞ்சம் பேச வேண்டும் என்றும் கேட்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.








