5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதற்கட்டமாக 3மாநிலத்திற்கு வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவு பெற உள்ளது. எனவே இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 5 மாநிலங்களுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியதுடன், சம்பந்தப்பட்ட அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில் அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் அறிவித்தார்.
- சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- ராஜஸ்தானில் நவம்பர் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தார்
இந்த நிலையில் இந்த 5 மாநில தேர்தல்களில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பாஜக ஏற்கனவே வேட்பாளர்களை வெளியிட்ட நிலையில் தற்போது 3 மாநிலத்திற்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன்படி மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 144 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் முதற்கட்டமாக வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத், சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 55 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியாகியுள்ளது. இதன்படி தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, கொடங்கல் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 30 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.







