ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதுதான் எடப்பாடி பழனிசாமி என்ற ஒரு அமைச்சர் இருப்பதே வெளியில் தெரியவந்ததாகவும், அன்றைய சட்டமன்ற நிகழ்வில் என்ன நடந்தது என்பது திருநாவுக்கரசர் எம்.பிக்கும், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆருக்கும் தான் தெரியும் எனவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி, கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒருநாள் கூட முழுவதுமாக நடைபெறவில்லை. காரணம் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் இரு அவைகளிலும் முதலில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி கடைசி நாளில் விளக்கம் அளித்து பேசினார். அவரின் அந்த விளக்கம் போதுமானதாக இல்லை என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 11 ஆம் தேதியோடு முடிந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது;
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 16 நாட்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றது. ஒரு ஆக்கபூர்வமான பணிகளும் விவாதங்களும் அங்கு நடைபெறவில்லை. மணிப்பூர் பிரச்சனை நடைபெற்று வரும் சூழ்நிலையில் வேரு முக்கியமான மசோதாக்களை கொண்டு வந்து மணிப்பூர் பிரானையை திசை திருப்பும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டது.
நூறு நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நடைபெற்று வருகிறது. இக்கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து, காடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்தியா கூட்டணி என்ற எதிர்கட்சி கூட்டணியின் ஒரே கோரிக்கை மற்ற நிகழ்வுகளை நிறுத்தி விட்டு மணிப்பூர் சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும் என்பதுதான். அது தான் நாடாளுமன்ற இயல்பும் கூட. பிரதமர் மோடி தினம்தோறும் நாடாளுமன்றத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றார். ஆனால் அவைக்கு வருவதில்லை . மேலும், ஒரே நாளில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மசோதாக்கள் நிறைவேறுகிறது.
42 சட்டங்களை குற்றத்தினை குறைத்து அல்லது குற்றமே இல்லை என மசோதா தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. பயன்பாடுகளில் இருந்த சட்டங்களை மாற்றியுள்ளனர். அதில் இருக்கும் குறிப்பீடுகள் வினோதமாக உள்ளது. பிரதமர் இரண்டு மணி நேரம் 10 நிமிடம் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதில் முதல் ஒன்றரை மணி நேரம் மணிப்பூர் மாநிலம் குறித்து வாய் திறக்கவில்லை. மாநில கட்சியான திமுகவை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விமர்சிப்பது திமுக மீது அவர்களுக்கு எவ்வளவு அச்சம் உள்ளது என தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் இருக்கும் சட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி அளிப்பதில்லை. அதுபோல் டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உரிமைகளைப் பறித்து சட்டமே இயற்றிவிட்டனர். மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என இந்தியா கூட்டணி தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி வந்தோம். மக்கள் விரோத அரசாக இருக்கிற பாஜக அரசை வரவிருக்கும் தேர்தலில் ஆட்சி அமைக்க விட கூடாது என்பதை மனதில் வைத்து மக்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் நாடாளுமன்றத்தை முடக்க வில்லை. எங்கள் எதிர்ப்பை தெரிவித்தோம்.
வேரு ஏதோ ஒரு பிரச்சனையை கொண்டு வந்து அந்த கூட்ட தொடறையே முடித்து வைத்திருக்கின்றனர். பாஜக அரசு அரசியல் மேடையில் பேசுவது போல் எதிர்கட்சிகளின் மீது விமர்சனங்களை வீசினர், நாடாளுமன்றத்தில் கடைபிடிக்க வேண்டிய நாகரீகத்தை கைப்பிடிக்க வில்லை என்றார். பாஜக அரசு வந்தபிறகு தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றது. அமலாக்கத்துறை நடவடிக்கை என்பது புதிதல்ல, சில மாநிலங்களில் சிலரை முடக்கியுள்ளனர் அச்சுறுத்தி உள்ளார். ஆனால் எங்கள் மடியில் கனமில்லை அதனால் எங்களுக்கு கவலை இல்லை.
நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசியது உண்மை என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி இருக்கிறார். அந்த சம்பவம் நடந்த போது நிர்மலா சீதாராமன் இந்தியாவிலேயே இல்லை. நேரில் கண்டது போல அவர் விமர்சித்தார். அதற்கு பதில் அளித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். குறிப்பாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தான் எடப்பாடி பழனிச்சாமி என்று ஒரு அமைச்சர் இருந்தார் என்பதே வெளியே தெரியவந்தது.
நிர்மலா சீதாராமன் பேசியது உண்மை என்று எப்படி அவரால் பேச முடியும்.. வேண்டுமென்றால் அன்றைய சட்டமன்ற நிகழ்வின்போது ஜெயலலிதாவிற்கு என்ன ஆனது என்பது குறித்து அவரது அருகில் இருந்த இன்றைய காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனிடம் தெளிவாக கேட்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே அன்றைக்கு என்ன நடந்தது என்பது தெரியும் என்றார்.
அரசியலுக்காக பழைய பிரச்சனைகளை எடுத்து மீண்டும் பேசுகின்றனர். அனைத்தும் ஒரு 6 மாதங்களுக்கு மட்டும்தான். அதன் பிறகு தேர்தல் வரும். நிச்சயம் காலம் மாறும். பாஜக அரசு எதை கொண்டு வந்தாலும் அதை கண்மூடிதனமாக அதிமுக ஆதரிக்கின்றது. கட்சியின் கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது வேறு என்ற புரிதல் கூட அவர்களுக்கு கிடையாது. பாஜகவும், அமிர்தாவும் எதைக் கொண்டு வந்தாலும் ஆதரிப்போம் என கண்மூடித்தனமாக ஆதரித்து வருகின்றனர்.
ஆளுநர் நீட் எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்ற மாட்டேன் என்று இன்று தெரிவிக்கவில்லை. அவர் தொடர்ந்து எப்போதும் அதை தான் தெரிவித்து வருகிறார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு அளிக்கப்படும் என்ற அவர், தற்போது இரண்டு கட்ட கூட்டம் தான் நடைபெற்று இருக்கிறது இன்னும் பல கூட்டங்கள் இருக்கிறது அப்போதுதான் எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், கொள்கைகள் என்ன, கூட்டணிகள் என்ன என்பது தெரியும். இப்போது தான் பயணத்தை தொடங்கி இருக்கிறோம்… யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தான் நாங்கள் முனைப்போடு இருக்கிறோம்.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா








