திருவெண்ணெய்நல்லூர் அருகே, மனக்குப்பம் பகுதியில் உள்ள மளிகை கடை குடோனில் பதுக்கிய வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்பிலான 168 கிலோ குட்கா பான் மசாலாவை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மனக்குப்பம் பகுதியில்
திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தில் வந்த கொரக்கந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கிரன்குமார் மற்றும் செல்வம் ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா மூட்டையை எடுத்து செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து வாகனத்தில் வந்த செல்வம் கிரண் குமார் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்று திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் யுவராஜ் என்பவரிடமிருந்து குட்கா பான் மசாலாவை வாங்கி வந்ததாக போலீசாருக்கு தெரியவந்தது. அதனைதொடர்ந்து குன்னத்தூர் கிராமத்தில் உள்ள யுவராஜின் மளிகை கடைக்குச் சென்ற திருவெண்ணெய்நல்லூர் போலீசார் மளிகை கடையிலும் அவரது குடோனிலும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 10 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா இருந்துள்ளது. மேலும் 10 மூட்டைகளில் இருந்த 168 கிலோ எடை கொண்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பான் மசாலாவை பறிமுதல் செய்த போலீசார் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மளிகை கடை உரிமையாளர் யுவராஜ் உட்பட கிரன்குமார் செல்வம் ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.







