இஸ்ரேலில் இருந்து சென்னை திரும்பிய 14 தமிழர்கள் – விமான நிலையத்தில் வரவேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

இஸ்ரேலில் இருந்து சென்னை திரும்பிய 14 தமிழர்களை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், …

இஸ்ரேலில் இருந்து சென்னை திரும்பிய 14 தமிழர்களை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார்.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும்,  இஸ்ரேலுக்கு நுழைந்தும் திடீா் தாக்குதல் நடத்தினா்.  இதன் பின்னர் பதிலடியாக இஸ்ரேலும் பதிலுக்கு நடத்தியதில் இரண்டு நாடுகளிலும் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா்.  5000க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

இதன் பின்னர் இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதல் நடத்தியதில்  காஸா பகுதியில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டது.  இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  அதேபோல போர்ப் பிரகடனம் அறிவித்துள்ள இஸ்ரேலுக்கும் கண்டனங்கள் வலுத்து வலுகிறது.

ரஷ்யா,  ஈரான்,  சவூதி உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 7-வது நாளாக தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள வைர வியாபாரிகள்,  தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள்,  மாணவர்கள் என சுமாா் 18,000 இந்தியர்கள் இஸ்ரேலில் வசித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.  மேலும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் குழு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம்
முதற்கட்டமாக இன்று 212  பேர் அழைத்து வரப்பட்டனர்.  டெல்லி வந்தடைந்த 212 பேரில் 21 தமிழர்கள்  தமிழகம் அழைத்து வரப்பட்டனர்,

21 தமிழர்களில் 14 பேர் காலை 10:10க்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் கிளம்பி 12:40-க்கு சென்னை வந்தடைந்தனர்.  மேலும் 7 பேர் 11.35 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் கோவை சென்றனர்.

இஸ்ரேலில் இருந்து சென்னை வந்தவர்களை விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  கலாநிதி வீராசாமி எம்பி ஆகியோர் வரவேற்றனர்.  இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

“இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அங்கு தமிழர்கள் சிக்கி உள்ளனர்.  அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது .  அதற்கு உதவி எண்களும் வெளியிடப்பட்டன.  அதில் தொடர்புகொண்டவர்கள் விவரங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோவை,  கடலூர்,  திருச்சி,  விருதுநகர்,  நாமக்கல்,  காஞ்சிபுரம்,  சென்னை உள்பட பகுதிகளைச் சேர்ந்த 21 பேர் ஆபரேஷன் அஜய் மூலம் டெல்லி வந்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டில் இருந்து தாயகம் திரும்புவோருக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.  அதன்படி இன்று டெல்லி வந்து 14 பேர் சென்னைக்கும் 7 பேர் கோவைக்கும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.”

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.