கரூரில் 12ஆம் வகுப்பு மாணவி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து வெளியே வராததைடுத்து, பக்கத்து வீட்டில் இருந்த பெண் ஒருவர், வீட்டுக்குச் சென்று பார்த்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாணவி தூக்கில் தொங்கியவாறு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறுமியின் அம்மாவுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அதில், பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும், என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு சொல்ல பயமா இருக்கு, இந்தப் பூமியில் வாழறத்துக்கு ஆசைப்பட்டேன், ஆனா, இப்போ பாதியிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ கிடைச்சா நல்லா இருக்கும். பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பண்ண ஆசை, ஆனா முடியாதில்ல. ஐ லவ் அம்மா, சித்தப்பா, அம்மு உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும். ஆனா நான் உங்கிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன், மன்னிச்சுருங்க’ என்று குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.
இந்த கடிதத்தை ஆதாரமாக கொண்டு வெங்கமேடு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை சிறுமி பாலியல் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அடங்குவதற்கு முன்பாகவே, கரூரில் மற்றொரு மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.