இந்தியாவில் 12 மாநிலங்களில் 51 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு குறைந்து வரும் இந்நிலையில், டெல்டா பிளஸ் என உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் பரவ தொடங்கியிருக்கிறது. இந்த வகை கவலைக்குரிய வைரஸ் (variant of concern) என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் இதுவரை இந்த 12 மாநிலங்களில் 51 பேருக்கு கொரோனா டெல்டா பிளஸ்
பாதிக்கப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 22 பேருக்கு டெல்டா பிளஸ் கண்டாறிப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஒன்பது, மத்தியப் பிரதேசத்தில் ஏழு, கேரளாவில் மூன்று, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, பஞ்சாப், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், மற்றும் ஜம்மு -காஷ்மீர் மாநிலங்களில் தலா ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த புதிய டெல்டா பிளஸ் வேரியன்டுக்கு எதிராகத் தடுப்பூசிகள் எந்த அளவிற்குச் செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வகத்தில் பரிசோதனை செய்து வருவதாகவும் இதன் முடிவுகள் ஒருவாரத்திலிருந்து பத்து நாட்களுக்குள் எதிர்பார்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் பலராம் பார்கவ் தெரிவித்துள்ளார்.
ஆர்.என்.ஏ. வகையான இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து மக்கள் மத்தியில் பரவிக் கொண்டே இருந்தால், அது உருமாற்றம் பெற்றுக் கொண்டேதான் இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர், அதனால் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது, கை கழுவுதல் உள்ளிட்டவற்றின் அவசியத்தை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். மருத்துவர்களும் இதை ஓயாமல் அறிவுறுத்தி வருகின்றனர்.







