10-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வழக்கு: கடுமையான தண்டனை வழங்க வேண்டும் – எல். முருகன் வலியுறுத்தல் !

கரூரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர்தர சிகிச்சை வழங்குவதோடு குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தலத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“கரூர் மாவட்டம் தரகம்பட்டி பகுதியில் 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் தொடர்ச்சியாக பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பள்ளி தாளாளரால், பள்ளி தலைமையாசிரியரால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் என்று பள்ளிச் சிறுமிகள் மீது எண்ணற்ற பாலியல் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒழுக்கநெறி சார்ந்த பயிற்சி வகுப்புகள் தேவைப்படுவதை, இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது. சட்டம்-ஒழுங்கையும், பெண்கள் பாதுகாப்பையும் தனது இரும்புக் கரங்களுக்குள் வைத்திருப்பதாய் கூறிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு வரும் பெண் குழந்தைகளின் பெற்றோருக்கும், இந்த சமுதாயத்திற்கும் எந்த வகையில் ஆறுதல் சொல்ல காத்திருக்கிறார்?

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனது துறையில் தினமும் நிகழ்ந்து கொண்டிருக்கிற குற்றங்களைப் பற்றிய அக்கறை சிறிதும் இல்லாமல், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக சமூக வலைதளங்களில் களமாடிக் கொண்டிருப்பது வேதனையின் உச்சமாக இருக்கிறது.

கரூர் மாவட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய மாணவிக்கு அரசின் உயர்தர சிகிச்சை முறை வழங்கப்பட வேண்டுமென்றும், குற்றத்தில் ஈடுபட்டோருக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டுமென்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.