கேரளாவின் எழுத்தறிவு திட்டத்தில் இணைந்து கல்வி கற்று தேர்வில் நூற்றுக்கு 97
மதிப்பெண் எடுத்து 108 வயது நிரம்பிய மூதாட்டி அசத்தியுள்ளார்.
தேனி மாவட்ட கம்பத்திலிருந்து கேரள ஏலத்தோட்ட வேலைக்கு தனது சிறு வயதில்
சென்ற கமலக்கண்ணிக்கு தற்போது 108 வயது நிறைவடைய உள்ள நிலையில் கேரள
மாநிலத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் எழுத்தறிவு திட்டத்தில் இணைந்து கல்வி
கற்று வருவது பலரையும் வியக்க வைத்துள்ளது .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கல்வி அறிவு பெற்றோர் எண்ணிக்கையில் கேரள மாநிலம் முதன்மையான மாநிலமாக
உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பெரும்பாலும் கல்வி அறிவை பெற்றுள்ளனர். கேரள
அரசால் வயது முதிர்ந்தவர்களும் கல்வி அறிவை பெற வேண்டும் என்ற திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பத்தை பூர்வீகமாக கொண்ட கமலக்கண்ணி என்ற மூதாட்டி இரண்டாம் வகுப்பு முடித்தவுடன் தனது குடும்ப வறுமை காரணமாக கேரளாவில் உள்ள வன்டன்மேடு பகுதியில் குடும்பத்துடன் குடியேறி ஏலத்தோட்ட வேலை செய்து வந்துள்ளார். கேரளாவில் அதிகளவு ஏலத் தோட்டம் உள்ளதால் தமிழகப் பகுதியில் இருந்து வேலை ஆட்கள் மொத்தமாக அங்கு சென்று வேலை பார்த்து வந்தனர்.
அந்த வகையில் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பாக மொத்தமாக குடும்பத்துடன்
குடியேறி ஏலத்தோட்ட வேலை செய்து வந்துள்ளார் கமலக்கண்ணி. தொடர்ந்து தோட்ட வேலை செய்து வந்துள்ளதால் கல்வியை பெற முடியாத நிலையில் இருந்துள்ளார். கடுமையாக உழைத்ததன் அடிப்படையில் தற்போது 108 வயது ஆனாலும் உடல் ரீதியாக ஆரோக்கியமான நிலையில் உள்ளார் கமலக்கண்ணி.
நல்ல கேட்கும் திறன், பார்வை திறன் உள்ள 108 வயதான மூதாட்டியான கமலக்கண்ணி கேரளாவின் எழுத்தறிவு திட்டத்தில் இணைந்து கல்வி கற்க தொடங்கியுள்ளார். திட்டத்திற்கு முன் உதாரணமாக திகழும் மூதாட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழிலும் மலையாளத்திலும் எழுத கற்றுக் கொண்ட இவர் எழுத்தறிவு திட்டத்தால் நடத்தப்படும் தேர்வில் நூற்றுக்கு 97 மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார்.
முதுமையான வயதிலும் திட்டத்தில் சேர்ந்து கல்வி கற்கும் அவரது ஆர்வத்தை கண்டு கேரளாவை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் பாராட்டி வருகின்றனர். முதுமையான வயதிலும் கல்வியறிவை பெற ஆர்வமுடன் உள்ள கமலக்கண்ணிக்கு பாராட்டு கேடயங்களும் வழங்கப்பட்டுள்ளது.