சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலைய நடைபாதை அருகே நிரந்தர பயணச்சீட்டு கவுன்ட்டர் அமைக்கக்கோரிய வழக்கில் தெற்கு ரயில்வே பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்கள், மாணவர்கள் எளிதில் பயணச்சீட்டு பெற்று ரயிலில் பயணம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது இயங்கி வரும் பயணச்சீட்டு கவுன்ட்டர், முழுநேரமாக செயல்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக, பதிலளிக்க தெற்கு ரயில்வேக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.







