புதுச்சேரியில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வங்கி ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், புதுச்சேரியில் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்றை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் மக்களும் அதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என கூறினார்.
இந்த நிலையில் பேருந்துகளில் இருக்கையில் அமர்ந்து மட்டுமே பயணிக்கலாம் என்றும் நின்றுகொண்டு பயணிக்க தடை விதித்துள்ளது. அனைத்து திரையரங்குகளும் 50% வாடிக்கையாளருடன் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளரங்க நிகழ்வு மற்றும் திருமண நிகழ்வில் 50% நபர்கள் மட்டும் அனுபதிக்கபடுவர் எனவும் மால்கள் மற்றும் கடைகளில் முகக்கவசம் இல்லாமல் அனுமதிக்கக்கூடாது என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார். இதனையடுத்து, கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவு வரும் 15 ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நோயாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.







