சென்னையில் டாட்டூ குத்துவதில் பல்வேறு சாதனைகளை புரிந்த வாலிபர் கள்ளக்காதலிக்காக கொள்ளையனாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பவர் வசந்த. இவர் வடபழனியில் டாட்டூ கடை ஒன்றை நடத்தி வந்தார். மேலும் தான் டாட்டூ குத்துவதை வீடியோவாக எடுத்து அதை யூடியூபில் பதிவிட்டு வந்தார். அதன்மூலம் பிரபலமான அவர் டாட்டூ குத்துவதில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். இந்நிலையில், இவருக்கு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு செலவு செய்ய மீஞ்சூர் பகுதியில் ஒரு மாதமாக செல்போன் மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அந்த பகுதியில் செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றத்தால், அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் தனிப்படை ஒன்றை அமைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவரை தேடி வந்தனர். அப்போது செல்போனின் ஐஎம்இஐ மூலமாக ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திடுகிடும் தகவல்கள் வெளி வந்தன. அதில், குற்றஞ்சாட்டப்பட்டவர் டாட்டூ கடை நடத்தி வரும் பவர் வசந்த் என தெரிய வந்தது. மேலும், அவர் தன் காதலிக்காக கொள்ளையனாக மாறியது தெரிய வந்தது. பின்னர், பதுங்கியிருந்த அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







