இளம் வயதில் அதிவேக இரட்டைச் சதம்: சாதனை நாயகனின் சரித்திரம் இதோ…!

உலக சாதனையை உடைத்தெறிந்து கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் 24 வயதே ஆன இந்திய வீரர் இஷான் கிஷான். சாதனை நாயகனின் விளையாட்டு பயணத்தை சற்று திரும்பி பார்க்கலாம். இந்தியாவிற்கு எதிரான 2 ஒருநாள்…

உலக சாதனையை உடைத்தெறிந்து கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் 24 வயதே ஆன இந்திய வீரர் இஷான் கிஷான். சாதனை நாயகனின் விளையாட்டு பயணத்தை சற்று திரும்பி பார்க்கலாம்.

இந்தியாவிற்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றிய வங்கதேச அணிக்கு, 3-வது போட்டி இவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என தெரிய வாய்ப்பில்லை. காயம் காரணமாக கேப்டன் ரோகித் ஷர்மா விலகிய நிலையில், அவருக்கு பதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார் இஷான் கிஷான்.

மறுமுனையில் ஆடிய தவான் சொற்ப ரன்னில் நடையை கட்ட, இஷான் கிஷானோ தொடக்கம்முதலே பந்துகளை பறக்கவிட்டார். 

வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி ருத்ர தாண்டவம் ஆடிய இஷான் கிஷான், தாம் சந்தித்த 85-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஆனால், அடுத்த 100 ரன்களை குவிப்பதற்கு அவருக்கு 41 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டன.

இதன்மூலம் 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்த அவர், 138 பந்துகளில் இதே சாதனையை படைத்திருந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்லின் சாதனையை தவிடுபொடியாக்கினார்.இந்திய வீரர்கள் சச்சின், சேவாக் மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக சர்வதேச ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த இஷான் கிஷான், தனது முதல் சதமே, சாதனை சதமாக மாறும் என்பதை கனவிலும் நினைத்திருக்கமாட்டார். இருப்பினும், 50 ஓவர்கள் வரை அவுட் ஆகாமல் விளையாடி இருந்தால் 300 ரன்களை குவிக்க வாய்ப்பிருந்ததாக கூறினார் அந்த இளங்கன்று.    

பீகார் மாநிலத்தில் 1998-ஆம் ஆண்டு பிறந்த இஷான் கிஷான், சிறுவயது முதலே கிரிக்கெட் மட்டையை காதலிக்க தொடங்கினார். 2014ஆம் ஆண்டு ஜார்கண்ட் அணிக்காக முதல்தர போட்டிகளில் அவர் களமிறங்கினார். 2015-ம் ஆண்டில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக 8 சிக்சர்கள் விளாசி 69 பந்துகளில் 87 ரன்களில் அடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இஷான் கிஷானை தேடி வந்தது 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டன் பதவி. 2016ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை சிறப்பாக வழிநடத்தியது அவரது கிரிக்கெட் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

ஆக்ரோஷமான ஆட்டத்தால் தனிமுத்திரை பதித்த இஷான், 2016ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரிலும் கால் பதித்தார். குஜராத் லயன்ஸ் அணிக்காக 35 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டபோது அவரது வயது 17.

அடுத்தடுத்த ஐபிஎல் தொடர்களில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் தன்னை பட்டை தீட்டிக்கொண்ட அவர், தற்போது காயத்தால் ரோகித் ஷர்மா விலகியதும், கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

ஆசியக்கோப்பையில் வெளியேறிய இந்திய அணிக்கு, இருபது ஓவர் உலகக்கோப்பையும் ஏமாற்றத்தையே அளித்தது. தொடர் சறுக்கல்களை சந்தித்துவரும் நிலையில், நாளைய வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இஷான் கிஷான் இருப்பார் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

* தென்றல் பிரபாகரன், நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.