’ஒரு திரைப்படம் கவனம் பெற….’ – இயக்குநர் சீனு ராமசாமியின் கலக்கல் கவிதை

ஒரு திரைப்படம் கவனம் பெற வேண்டுமென்றால் என்னென்ன நடக்க வேண்டும், நடக்கக் கூடாது என்பதை விவரிக்கும் கவிதை ஒன்றை இயக்குநர் சீனு ராமசாமி எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :…

ஒரு திரைப்படம் கவனம் பெற வேண்டுமென்றால் என்னென்ன நடக்க வேண்டும், நடக்கக் கூடாது என்பதை விவரிக்கும் கவிதை ஒன்றை இயக்குநர் சீனு ராமசாமி எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “ஒரு திரைப்படம் கவனம் பெற முதலில் மழை பெய்யவே கூடாது. மதுகூடத்தை தவிர மற்ற இடங்களுக்கு செல்ல மக்களுக்கு இன்னும் தைரியம் பிடிபடவில்லை மழைக்காலங்களில்… ஒரு திரைப்படம் கவனம் பெற சிறந்த கிரிக்கெட் வீரர்களின் மைதானம் காலியாக இருக்க வேண்டும். மாநிலத்தின் நிலவரம் கலவரம் தவிர்த்து இருத்தல் அவசியம்.

ராஜீவ் காந்தியோடு அன்று வெளிவந்த ஐந்து திரைப்படங்களும் மடிந்தன என அறிந்தேன். பரிட்சை காலங்கள் முடியும் வரை படம் வெளியிடாமல் காத்திருப்போர் புத்திசாலிகள். போஸ்டர்கள் முதல்நாள் இரவு ஒட்டியிருத்தல் அவசியம். ஊடகம் பத்திரிக்கை அன்பர்களின் அன்பும் தொலைக்காட்சிதனில் ஒரு பாடலாவது ஈர்க்க வேண்டும்.

ஒரு படம் கவனம் பெற பெரிய நடிகர்கள் கொண்டு விளம்பரம் செய்வது சிறந்தது. அதை விட பிற நடிகர்கள் எப்படி தானே விளம்பரங்களில் மனமுன் வந்து படங்களில் பேசிய வசனங்களை விட அதிகமா பேசி மக்களை கவர்கின்றனர் என்பதை இளைய நடிகர்கள் பயில வேண்டும். நடிப்பு பயிற்சி போல் அயர்ச்சியில்லா இப்பிரச்சாரம் கற்பது முக்கியம்.

ஒரு படம் கவனம் பெற பழைய லாட்டரி வியாபாரிகளிடம் யோசனை கேட்பது கூட தப்பில்லை. படம் கவனம் பெற முதலில் படம் நேர்த்தியாக ரசிகர்களை கவரும்படி இருக்க வேண்டும். இது அடிப்படை விதி. சிறந்த படங்கள் குறைவான தியேட்டர்களில் அதே சமயம் குறை கூட்டமாயினும் தியேட்டர் அதிபர்கள் மக்கள் வாய் மொழி பரவி தியேட்டர் வர பொறுமை அருள வேண்டும்.

அந்நிய ஆங்கில சாகசப்படங்களுடன் மோதல் சுதேசிக்கப்பல் போல் யாரும் துணைவராது கைவிடுவர். படம் கவனம் பெற எதிர்மறை சர்ச்சைகள் உதவக்கூடும். படம் கவனம் பெற
அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராயினும் தொலைபேசி அணைத்தல் தர்மமாகாது. படம் முடியும்போது சொன்ன தேதியில் அது வரும்படி தேதி அறிவித்தல் அவசியம்.

ஒரு படம் கவனம் பெற பெரிய படங்களுடன் மோதாமல் தனியே வருதல் முக்கியம். ஒரு படம் கவனம் பெற தின்பண்டங்கள் டிக்கெட் விலையை விட குறைவாக இருக்க வேண்டும். ஒரு படம் கவனம் பெற தியேட்டருக்குள் போகும் போது மின் ஏற்ற படிகள் தூக்கிச் செல்வதும் முடிந்ததும் பின்பு பின் பக்கம் ஆடுகளை படிக்கட்டுகள் வழியாக திறந்து விடும் கருணையற்ற போக்கு மாற வேண்டும்.

ஒரு படம் கவனம் பெற்றாலும் காலத்தால் வாழும் தன்மை அப்படத்தில் இருந்தால் முதல் மூன்று நாட்கள் தியேட்டர் விதி மீறி மக்களிடம் வாழும் தன்மை பெறும் படைப்பாகும். படம் கவனம் பெற படமே பிரதானமாகும்”. இவ்வாறு இயக்குநர் சீனு ராமசாமி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.