கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் இரவு காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோயில்களில் காலியாகவுள்ள இரவு காவலர் பணிக்கு முன்னாள் படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் திடகாத்திரமாகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். பார்வைத் திறன் மற்றும் செவித்திறன் சிறப்பாக இருக்க வேண்டும். 62 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும்.
மேலும், கோவில் இரவு காவலராக பணிபுரிவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 7,600 வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி, பணிக்கு விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் தங்களது விருப்ப மனுக்களுடன் வயது தொடர்பான சான்று மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் 31.10.2022- க்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








