திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பதி திருமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று தொடங்கியது. இந்நிகழ்வில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்தால் கோவிந்தா கோஷமிட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காணமாக ஆலய வளாகத்திற்குள்…

திருப்பதி திருமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று தொடங்கியது. இந்நிகழ்வில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்தால் கோவிந்தா கோஷமிட்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காணமாக ஆலய வளாகத்திற்குள் நடந்த திருப்பதி பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.  இதையடுத்து கோவில் மற்றும் கோவில் வெளிப்புறங்களில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் திருமலை முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கிறது.

இன்று மாலை 5.45 மணியில் இருந்து மாலை 6.15 மணிவரை மீன லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக கோவிலில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. திருப்பதி பிரம்மோற்சவத்தையொட்டி ஒவ்வொரு நாளும் மலையப்ப சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 2-வது நாள் (நாளை) காலை சின்ன சேஷ வாகனத்திலும், மாலை அம்ச வாகனத்திலும், 3-வது நாள் காலை சிம்ம வாகனத்திலும், மாலை முத்து பல்லக்கு வாகனத்திலும், 4-வது நாள் கல்ப விருட்ச வாகனத்திலும், மாலை சர்வ பூபால வாகனத்திலும், 5-வது நாள் மோகினி வாகனத்திலும், மாலை தங்க கருட வாகன ஊர்வலம் நடைபெறுகிறது. 6-வது நாள் அனுமந்த வாகனமும், மாலை தங்கத்தேர் வாகன சேவை நடைபெறுகிறது. 7-வது நாள் காலை சூரிய பிரபை வாகனமும், மாலை சந்திர பிரபை வாகன வீதி உலா நடைபெறுகிறது.

8-வது நாள் காலை தேர் வீதி உலாவும், மாலை குதிரை வாகன ஊர்வலம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழா நிறைவு நாளான 5-ந்தேதி அதிகாலை 3 மணியில் இருந்து காலை 6 மணிவரை பல்லக்கு வாகன வீதிஉலா, காலை 6 மணியில் இருந்து காலை 9 மணிவரை தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 4 மாட வீதியில் சாமி வீதி உலாவை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். பிரம்மோற்சவ விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.