கணவனை பழிவாங்குவதற்காக பெற்ற குழந்தையை கொடூரமாகத் தாக்கிய பெண் ஆந்திராவில் கைது செய்யப்பட்டு தமிழ்நாடு அழைத்து வரப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மணலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். கூலி தொழிலாளியான இவர், ஆந்திர மாநிலம், சித்தூர் அருகிலுள்ள ராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துளசி என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 4 மற்றும் 2 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
இதற்கிடையே தம்பதிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில் கடந்த பிப்ரவரி மாதம் 2 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய துளசி, அதனை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்தக் காட்சிகளை கணவர் வடிவழகனின் செல் போனுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதனைப் பார்த்த வடிவழகன் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவி பலரையும் அதிர வைத்தது. இதுதொடர்பாக துளசி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சித்தூர் தாலுகா ராம்பள்ளி பகுதியில் இருந்த துளசியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதையடுத்து, செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அவர் அழைத்து வரப்பட்டார்.








