அயோத்தி கோயில் மூலம் உலகில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் கனவு நனவாகியுள்ளது என தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ்கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக 2.27 ஏக்கர் பரப்பளவில் மூன்றடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதனை தொடர்ந்து, இக்கோயிலின் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்ட உள்ளது.
ராமர் சிலைக்கு வரும் ஜனவரி 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள மூலவர் குழந்தை ராமரின் சிலை 8 அடி உயரம், 3 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ்கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதா, ‘‘அயோத்தியில் ஸ்ரீ சீதாராமா சந்திர ஸ்வாமிசிலை பிரதிஷ்டை செய்யப்படுவதன் மூலம் உலகில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் கனவு நனவாகியுள்ளது. இதை தெலங்கானா மாநிலத்துடன் இணைந்து ஒட்டுமொத்த நாடும்வரவேற்கிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.







