யோகிபாபு நடித்த காசே தான் கடவுளடா திரைப்படத்தை தற்போது வெளியிடமாட்டோம் என தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் யோகிபாபு, சிவா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘காசே தான் கடவுளடா’. இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு 80% முடிக்கப்பட்டு விட்டது.

இந்தநிலையில், படத் தயாரிப்புக்கு பெற்ற ரூ.1.75 கோடி கடனை திருப்பி தராமல் படத்தை வெளியிட தடை கோரி திருவான்மியூரைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட தொகை திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் அளித்தது. மேலும், திரைப்படத்தை தற்போது வெளியிட திட்டம் இல்லை என்று தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சரவணன், மனுதாரருக்கு பதிலளிக்க உத்தரவிட்டதோடு, விசாரணையை மார்ச் 2-ம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.







