காலை சிற்றுண்டி திட்டம் தரமானதாக அமையுமா? – சீமான் கேள்வி

காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவுகள் தரமானதாக அமையுமா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசனின் 77-வது நினைவு நாளையொட்டி சென்னை…

காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவுகள் தரமானதாக அமையுமா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசனின் 77-வது நினைவு நாளையொட்டி சென்னை கிண்டி, காந்தி மண்டபத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பேத்கருக்கு தமிழில் கையெழுத்து போட கற்றுக் கொடுத்தவர் இரட்டைமலை சீனிவாசன் என்றார்.புதிதாக கட்ட கூடிய பாராளுமன்றத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.கருணாநிதிக்கு பேனா வைப்பதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்ததாக கேட்கப்பட்ட
கேள்விக்கு, மத்திய அரசு அனுமதி கொடுத்தால் அதை நாங்கள் அனுமதிக்க வேண்டுமா? என்றும் அவர் கூறினார். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தும், ஷாகா வகுப்புகள் நடத்த அனுமதி கொடுத்ததற்கு நன்றி கடனாக தான் கருணாநிதிக்கு பேனா வைப்பதற்கு அனுமதி பெற்று இருக்கிறார்கள் என சாடினார்.பள்ளி மாணவர்களுக்கு காலையில் உணவு வழங்குவதை வரவேற்கிறேன், ஆனால் அரசியலுக்காக செய்வதை
நாங்கள் எதிர்க்கிறோம்.

குழந்தைக்கு உணவு ஊட்டி விட்ட உடனே கை கழுவி விட்டார் முதலமைச்சர், அதுதான்
திராவிட மாடல்.தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டம் முதலமைச்சரின் பேரன் அமர்ந்து சாப்பிடுவதை போல் தரமானதாக இருக்குமா? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். தரமில்லாமல் தான் அரசு பள்ளிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர்,அமைச்சர்களின் பிள்ளைகளையும் காலை உணவு திட்டத்தில் அமர்ந்து சாப்பிட சொல்ல வேண்டும் என்றார். மஞ்சப்பை என்ற திட்டம் ஒரு நாள் தான் செயல்பட்டது. இப்போது எங்கு சென்று விட்டது என தெரியவில்லை.ஜெயலலிதா ஏன் அப்போலோ மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றார். அரசு
மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று இருந்தால் மக்களுக்கு மருத்துவமனையின்
மீது நம்பிக்கை வந்திருக்கும் என்றார். 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியரிடம் தனது மகனை படிக்க வைக்கிறார். அந்த அளவிற்கு அரசு பள்ளிகளில் கல்வி தரம்
இல்லாமல் உள்ளது என சீமான் குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.