KGF – 2 , RRR, மற்றும் விக்ரம் திரைப்படம் உலக அளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை பட்டியலில் பொன்னியின் செல்வன் முதல் பாகமும் இடம் பெறுமா ?
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம் செப் 30 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. 500 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் முதல் நாள் மட்டும் உலகம் முழுவதும் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பெரும்பாலான திரையரங்குகளில் இரண்டு வாரங்களுக்கான முன்பு பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வசூல் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
70 ஆண்டுகளுக்கு மேலாகப் பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமாக எடுக்கப் பலர் முயற்சி செய்த நிலையில் பல போராட்டங்களுக்குப் பிறகு இயக்குநர் மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் வெளியான இரண்டு நாளில் உலகம் முழுவதும் 150 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அஜித் நடித்த வலிமை 36 கோடி வசூல் செய்து முதல் இடத்தையும், விஜய்யின் பீஸ்ட் 27.40 கோடி வசூல் செய்து இரண்டாம் இடத்தையும் பிடித்த நிலையில் பொன்னியின் செல்வன் 26 கோடி வசூல் செய்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே நேரத்தில் 2022 ஆம் ஆண்டில் வெளியான பான் இந்தியா படங்களான கே.ஜி.எஃப் பாகம் 2, RRR, விக்ரம் போன்ற படங்கள் உலக அளவில் அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதன் அடிப்படையில் கே.ஜி.எஃப் பாகம் 2 உலக அளவில் 1200 கோடியும், RRR உலக அளவில் 1150 கோடியும் அதே போல விக்ரம் திரைப்படம் உலக அளவில் 430 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை பட்டியலில் பொன்னியின் செல்வன் முதல் பாகமும் இடம் பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். அப்படி உலக அளவில் அதிக வசூல் பெரும் பட்சத்தில் தமிழர்களின் பெருமையாகக் கருதப்படும் பொன்னியின் செல்வன் உலக அளவில் பேசப்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
– தினேஷ் உதய்