சென்னை அருகே கடன் தொல்லையால் மனைவி மற்றும் 2 மகன்களை கொலை செய்துவிட்டு, கணவரும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த மணிகண்டன் என்பவர், போரூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவருக்கு தாரா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருந்தனர்.
இந்நிலையில், கிரிக்கெட் மட்டையால் தாராவை அடித்து கொன்ற மணிகண்டன், தனது இரண்டு மகன்களையும் தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். தகவலறிந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் மணிகண்டனுக்கு அதிக கடன்சுமை ஏற்பட்டுள்ளதால் மனைவி மற்றும் மகன்களை கொலை செய்து, தானும் உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








